ஐநாவில் பாகிஸ்தானுக்கு இப்படி ஒரு பொறுப்பா? மத்திய அரசு என்ன செய்கிறது?: காங்கிரஸ்!

பயங்கரவாதத்திற்கு அப்பட்டமாக ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தானுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் துணை தலைமை பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அது மட்டும் இன்றி ஆவணங்கள் மற்றும் பிற நடைமுறை கேள்விகள் குறித்த முறைசாரா பணிக்குழுக்களுக்கும் இணை தலைமை பொறுப்பும் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் துணை தலைமை பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா, தனது ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் துணைத் தலைவராகவும், 2025 ஆம் ஆண்டிற்கான தலிபான் தடைகள் குழுவின் தலைவராகவும் பாகிஸ்தானை நியமித்தது மிகவும் வருந்தத்தக்கது. தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். “பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உருவாக்குகிறது. இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகிறது. இருவரையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது. அவர்கள் ஒரே மாதிரி நடத்தப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

கார்கே மேலும் கூறுகையில், சர்வதேச சமூகம் இந்தியாவின் கருத்தை மதிக்க வேண்டும். பாகிஸ்தானை FATF சாம்பல் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதன் மூலம், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்வதை கண்காணிக்க முடியும். இந்தியாவில் இதற்கு முன்னர், மன்மோகன் சிங் ஆட்சியில் 2008-ல் முதல் முறையாகவும், பின்னர் 2012-ல் மீண்டும் சேர்க்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று கார்கே வலியுறுத்தினார். மேலும், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின்லேடன் மற்றும் காலித் ஷேக் முகமது இருவரும் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து கார்கே கூறுகையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதை சர்வதேச சமூகம் எவ்வாறு அனுமதிக்கிறது? மேலும், IMF மற்றும் உலக வங்கி பாகிஸ்தானுக்கு அளித்த நிதியுதவி குறித்தும் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் மீண்டும் ராணுவ செலவை அதிகரித்து, பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவைத் தாக்கும். பாகிஸ்தானிடம் பொறுப்புக்கூறலை எதிர்பார்ப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் “மிகவும் முக்கியம்” என்று அவர் குறிப்பிட்டார்.