தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுகவை இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் ஆதரிக்காதது ஏன் என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டில் நடைபெறும்’ என்று மத்திய அரசு அறிவித்தது முதலே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார். ‘விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும். தென்னிந்திய மாநிலங்கள் உட்பட நாட்டில் எந்த மாநிலமும் இதனால் பாதிக்கப்படாது’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ஆனாலும்கூட, ‘மக்கள்தொகை கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்கு தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதி செய்கிறது’ என்று ஸ்டாலின் மீண்டும் மீண்டும் உண்மைக்கு மாறாக பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.
2027-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எப்படி பிரதிநிதித்துவம் குறையும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்திய பிறகும் ஸ்டாலின் தொடர்ந்து இவ்வாறு கூறுவது ஏன். 2027-ல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்கிறாரா. அறிவிக்காத ஒன்றை வைத்து திமுக ஏன் விஷம பிரச்சாரம் செய்கிறது.
இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவர் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ஆனால், இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை. டெல்லியில் இண்டியா கூட்டணி கூட்டத்தை கூட்டி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை ராகுல் காந்தியை வைத்து அறிவிக்க வேண்டியது தானே. முதல்வர் ஸ்டாலினால் இதை செய்ய முடியாது. ஏனென்றால், திமுகவின் கட்டுக்கதையை நம்ப இண்டியா கூட்டணி தலைவர்களே தயாராக இல்லை.
தொகுதி மறுவரையறை விஷயத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் திமுகவை ஆதரிக்கவில்லையே ஏன்? அவர்களே நம்பாதபோது, தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள். இதெல்லாம் தெரிந்துதான் அறிக்கை மேல் அறிக்கையாக விடுகிறார் ஸ்டாலின். இதில் அவரது மடை மாற்றும் அரசியல் தோலுரிக்கப்பட்டு விட்டது. தொகுதி மறுவரையறை பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பே பூச்சாண்டி கிளப்புவதை விட்டுவிட்டு, நான் ஏற்கெனவே கூறியபடி, நிர்வாக சீர்குலைவில் இருந்து தமிழக அரசை காப்பாற்ற முதல்வர் ஏதாவது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.