தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவியின் மகன் திருமண விழா தக்கோலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும். தமிழகத்தில் நல்லாட்சி நிலவ அதிமுக கூட்டணியை ஆதரியுங்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம், வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கூறிவருகிறார். அவர் பகல் கனவு காண்கிறார். மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை, திமுக அரசு முடக்கி உள்ளது. திமுக அரசு இதுவரை எந்த திட்டத்தையும் புதிதாக கொண்டுவரவில்லை. ஏற்கெனவே அதிமுக அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஊழலும், முறைகேடுகளும் அதிகரித்துள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, அதிமுகவினர் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும்.
2010 ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை தடுத்து நிறுத்த அதிமுக அரசு நீதிமன்றம் மூலம் முயற்சித்தது. நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.