முதல்வர் ஸ்டாலின் உடல் நிலை குறித்து மோடி, சோனியா நலம் விசாரித்தனர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மேலும் சில நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஸ்டாலின் நலம் விசாரித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நேரில் முறைப்படி அழைப்பு விடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினே டெல்லி சென்று நேரடி பிரதமர் மோடியை செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ள அழைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி அவர் சிகிச்சை பெற்று வருவதால் திமுக எம்.பிக்களை அனுப்பி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சோனியா காந்தி உடல் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்தார். உடல்நிலை, சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.

இன்று சென்னை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது”, என்று குறிப்பிட்டுள்ளது.