கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரே நம்பிக்கை அரசுப்பள்ளிகள் தான்: நடிகர் கார்த்தி!

கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரே நம்பிக்கை அரசுப்பள்ளிகள் தான் என்று நடிகர் கார்த்தி கூறினார்.

கோவை மாவட்டம், சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் பிரபல நடிகர் சிவகுமாரும் கலந்து கொண்டார். அவர் அந்தப் பள்ளி மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். சிவகுமாருடன் அவரின் மகன் நடிகர் கார்த்தியும் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகை வழங்கப்பட்டது. அதேபோல அந்தப் பள்ளியில் படித்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்களும் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரே நம்பிக்கை அரசுப்பள்ளிகள் தான். கல்வி என்றாலே அரசுப்பள்ளி தான். அகரம் அறக்கட்டளையில் இருக்கும் மாணவர்கள் எல்லாம் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் தான். அவர்கள் எல்லாமே முதல் தலைமுறை மாணவர்கள். அவர்கள் தங்களின் பள்ளி, ஆசிரியர்கள் பற்றி கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

தனியார் பள்ளிகளை விட, அரசுப் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களை அரசு நன்றாக பார்த்துக் கொள்கிறது. அதனால் அவர்கள் மாணவர்கள் மீது அக்கறை செலுத்துகிறார்கள். விமர்சனங்கள் இருந்தாலும் மிடில் கிளாஸ் மக்களின் வாழ்வாதாரம் அமெரிக்காவுக்கு நிகராக இருக்கிறது என்றால் அதற்கு அரசு பள்ளிகள் தான் முக்கிய காரணம். இந்தப் பள்ளிக்கு அகரம் எப்போதும் துணை நிற்கும்.

தமிழக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. தமிழ்நாட்டில் கல்வி உயர்தரமாக வழங்கப்படுவது பெருமையாக உள்ளது. என் அத்தை (சிவகுமாரின் சகோதரி) படிக்கும்போது கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளிக்கு செல்வதற்கே சிரமப்பட்டார்.” என்று கண் கலங்கினார்.

தொடர்ந்து பேசிய கார்த்தி, சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குகிறோம் என்று மேடையில் அறிவித்தார். கார்த்தி கண் கலங்கியதை எதிர்பாராத சிவகுமார், அதைக் கண்டு உருகி கார்த்தியை ஆரத்தழுவி சமாதானப்படுத்தி உட்கார வைத்தார். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் சிவகுமார் தன் பள்ளி பருவ நினைவுகளை ஆச்சர்யத்துடன் பேசுகையில், “என் ஆசிரியர்களை பார்க்கும் போது எல்லாம் அவர்களைப் போலவே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காகவே அனைத்து பாடங்களையும் மனப்பாடம் செய்து படித்தேன். ஓவிய ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓவியம் பயின்றேன்.” என்றார். மேலும் மேடையில் கலைஞர் கருணாநிதியின் வசனத்தை பேசி அசத்தினார். “இது எந்தப் பாட்டு” என்று அன்பில் மகேஷிடம் கேட்டபோது அரங்கில் சிரிப்பலை எழுந்தது

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, “பெற்றோர் தங்கள் குழந்தைகளை சக மாணவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவர்கள். அவர்களின் திறமையை கண்டறியும் பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்” என்றார்.