மதுரையில் நடக்கக் கூடிய மாநாட்டை முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: பெ.சண்முகம்!

“மதுரையில் ஆன்மிக மாநாடு என்ற பெயரில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை உண்மையான முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்து, இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காயமடைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயர்தர சிகிச்சை வழங்கவும் மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விமான விபத்து தொடர்பாக நேர்மையான, சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, ஜூன் 22-ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. ஆன்மிக மாநாடு என்ற பெயரில் நடக்கக் கூடிய இந்த அரசியலுக்கான மாநாட்டை புரிந்து கொண்டு, உண்மையான முருக பக்தர்கள் அந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாது. ஏனென்றால், பாஜக- அதிமுக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். 2018-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வரும் எந்த ஒரு கட்சியும், பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளைவிட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டு, கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு செல்லவேண்டும் என, முடிவு எடுத்துள்ளோம். எவ்வளவு தொகுதிகள் என்பது பேச்சுவார்த்தையின்போதுதான் தெரிய வரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதலான தொகுதிகளை திமுக கொடுக்காமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது திமுகவின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.