கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால், 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதிச்சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிப்பதற்காக முறையற்ற வழியை நாடுகின்றனா். அது துயரத்தில் இருக்கும் கடனாளிகளை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாய் அமைந்து, அதன் மூலம் பலரது குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கை பாதிப்படையச் செய்து விடுகிறது.
இதன் காரணமாக, கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினாலோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலோ 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவை, தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்த நிலையில், கடன் வசூல் தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார்.
தனிநபா் அல்லது தனி நபா்கள் உதவிக் குழுக்கள் அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கி நலிவடைந்த பிரிவினரைப் பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றுவது அவசியமாகக் கருதப்படுகிறது. அதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளதற்கு ஏற்ப, அதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.
வங்கிகள், இந்திய ரிசா்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களைத் தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால், இந்த வங்கிகளுக்கும், பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்களுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
இந்தச் சட்டம், கடன் வாங்கியவா் மற்றும் அவரது குடும்பத்தினரை, அதாவது அவரின் பெற்றோர், கணவா் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது.
அந்த வகையில், அவா்களுக்கு இடையூறு விளைவித்தல் வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல் அவா்கள் போகுமிடங்களில் பின்தொடா்தல் அவா்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக்கொள்ளுதல், அவரது வீடு, வசிக்குமிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்குச் செல்வது, பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்த, தனியார் அல்லது வெளித்தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துதல், அரசு திட்டத்தின் கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருள்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருதல் போன்றவை வலுக்கட்டாய நடவடிக்கைகளாக 20-ஆம் பிரிவுன்படி கருதப்படும்.
20-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டுதல், பின் தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்ந்தோ விதிக்கப்படும். வெளி முகமைகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.
கடன் பெற்றவா் அல்லது அவரது குடும்ப உறுப்பினா் யாராவது தற்கொலை செய்து, அது, கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108-ஆம் பிரிவின்கீழ் குற்றமாகக் கருதப்படும்.
கடன் வழங்கும் நிறுவனம் தொழில் நடத்த விரும்பும் மாவட்டம் அல்லது வட்டாரத்தில் பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவத்தை அளித்து பதிவு செய்ய வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும். கடன் வழங்கும் நிறுவனம் ஒவ்வொன்றும், பதிவு செய்துள்ள நிறுவனத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும்.
பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அந்த நிறுவனம், கடனுக்கான வட்டி வீதம், அலுவலக விவரங்கள், வலைதளம், தகவல் தொகுப்பு ஆகியவற்றை சிறிய புத்தகம் அல்லது விளம்பர அறிவிப்புகளில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.