நாட்டுப்புற பாடகரும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி உடல் நலக்குறைவால் இன்று (ஜூன் 14) காலமானார். அவருக்கு வயது 99.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி (99). நாட்டுப்புற பாடகரான இவர், ‘ஆண் பாவம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ‘ஆயுசு நூறு’, ‘ஏட்டிக்கு போட்டி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த அவருக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1993-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தார்.
கொல்லங்குடி கருப்பாயி கடைசியாக இயக்குநர் சசிக்குமார் இயக்கிய ‘காரி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். கொல்லங்குடி கருப்பாயி அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். தன்னுடைய கணவர், மகள் இறந்த நிலையில், கொல்லங்குடியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
ஜெயலலிதாவிடம் இவர் வைத்த கோரிக்கையால் தான் அங்குள்ள அரசு பள்ளிக்கு பட்டா கிடைத்தது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலை 8 மணிக்கு மரணமடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கு நாளை (ஜூன் 15) நடைபெறும் என அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லங்குடி கருப்பாயின் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.