‘கோவில்’ படத்தில் வரும் வடிவேலு காமெடியை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம், நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கொடுத்துள்ளார்.
அண்மையில் சேலத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பிரதமர் பேரில் இருக்கக்கூடிய திட்டங்களுக்கு மாநில அரசு தான் 50% நிதி தருகிறது. மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி கொடுத்து வருகிறது. படையப்பா படத்தில் ஒரு காட்சி வரும். மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னுடையது என ஒரு டயலாக் வரும். அதுபோல மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி கொடுத்து வருகிறது.” என்று விமர்சித்தார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்! படையப்பா படக் ‘காமெடி’ போல “மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மத்திய உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பதிவை பகிர்ந்து, அவருக்கு இன்னொரு மீம் டெம்ப்ளேட் போட்டு பதில் கொடுத்துள்ளார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. கோவில் படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி டெம்ப்ளேட்டை பகிர்ந்துள்ளார் அண்ணாமலை. அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப் பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ரூபாய் 5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது.
உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது” எனத் தெரிவித்துள்ளார்.