மற்றவரிடத்தில் கருணையோடு இருங்கள்: நடிகை ராஷ்மிகா!

மற்றவரிடத்தில் கருணையோடு இருங்கள் என்று நடிகை ராஷ்மிகா கூறினார்.

நடிகர் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடித்துள்ள படம் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தஹில் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. கிடத்தட்ட ரூ. 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பேன் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது.

ஏற்கனவே குபேரா படத்தின் டிரைலர் நேற்று வெளியாக இருந்தது. ஆனால், அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சேகர் கம்முலா ஆகியோருடன் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தெலுங்கு டிரைலர் வெளியிடப்பட்டது. இயக்குநர் ராஜமௌலி தெலுங்கு டிரைலரை வெளியிட்டார். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைனில் அனைத்து மொழிகளிலும் டிரைலர் வெளியானது.

குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகை ராஷ்மிகா பேசியதாவது:-

விமான விபத்துக்கு பிறகு நான் நடுங்கிப் போனேன். எதுவும் உலகில் நிரந்தரம் இல்லை என புரிந்தது. நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன, எதுவரை வாழ்க்கை செல்லும் என தெரியவில்லை. எனவே கவனமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், மற்றவரிடத்தில் கருணையோடு இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.