இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வாருங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் இயக்கத்தில் இணையுமாறு ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விருதுநகரில் பள்ளிக்கல்வியை தொடராமல் விட்டுவிடும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஈடுபட்டு வருகிறார். மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:-

விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள். கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உயர்த்தியுள்ளோம். இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு எனது வேண்டுகோள் என்ன என்றால், இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும். உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.

காலை உணவு திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் மாணவர்களை கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.