தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சீமான் பனை மரத்தில் ஏறி, கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் நேற்று நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரம் ஏறினார். பின்னர் கீழே இறங்கிய சீமான், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நிர்வாகிகளுடன் பனையோலை பட்டையில் கள் அருந்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
பனை, தென்னையில் இருந்து இறக்கப்படும் கள் வேளாண்மையோடு சேர்ந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை இருந்ததை உடைத்தெறிந்தோம். அதேபோல, கள் இறக்க அனுமதி மறுக்கப்படுவதையும் உடைத்தெறிவோம்.
கள் போதை பானம் என்றால், டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? அல்லது புனித நீரா? மற்ற மாநிலங்களில் கள் இறக்க அனுமதி இருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்யப்படுவது ஏன்? பனை கள்ளுக்கு ஏற்பட்ட தடையால் பனை மரங்கள் குறைந்து வருகின்றன. எனவே, நாம் தமிழர் கட்சி சார்பில் அனைத்து இடங்களிலும் பனை விதை விதைத்து வருகிறோம். கள் விற்க அனுமதி கேட்டால், டாஸ்மாக் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசு அறிவுரை வழங்குகிறது. கள் எங்கள் உரிமை. கள்ளுக்கான தடையை மீட்டெடுப்பதே எங்களது கடமை. இவ்வாறு சீமான் பேசினார்.
தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் நல்லுசாமி பேசும்போது, ‘பனை கள்ளை போதைப் பொருளாக அறிவித்துள்ளனர். இது தவறு. கள் இறக்க அனுமதி தரவில்லை என்றால், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்வது உறுதி’ என்றார்.