மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
வேலூரில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் அன்புமணி பேசியதாவது:-
பல்வேறு துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும். அடித்தட்டு, பின்தங்கிய மக்களை மேம்படுத்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மேலும், சமூக நீதியை நடைமுறைபடுத்தவும் திமுக தவறிவிட்டது. கிராமங்களில் பாமக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். ஜூலை 25-ல் ராமதாஸ் பிறந்த நாளில் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன்.
தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்று கேட்டால், அதற்கு பதில் அளிப்பதில்லை. தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது. சித்திரை முழு நிலவு மாநாட்டைப் பார்த்து திமுக அரண்டு போயுள்ளது. இடஒதுக்கீடுவழங்காமல் ஏமாற்றிய திமுகவுக்கு, வரும் தேர்தலில் வன்னியர் சமூகத்தினர் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
குட்கா, புகையிலை உள்ளிட்டவை குறித்து நான் பேசாமல் இருக்க எனக்கு பல கோடி ரூபாய் தர முன் வந்தனர். இது போன்ற பல லாபிகளை பார்த்துள்ளேன். அத்தனை லாபிகளையும் தன்னந்தனியாக எதிர்த்தவன் இந்த அன்புமணி ராமதாஸ். நான் குட்கா, புகையிலை குறித்து பேசுவதை தடுத்து என் வாயை அடைக்க யார் யார் மூலமாகவோ வந்து பேரம் பேசினர். “உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம். நீங்கள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தால் போதும்” என்றார்கள். குட்கா குட்கா குறித்து நான் பேசாமல் இருக்க ரூ 1000 கோடி தருவதாக அன்று சொன்னார்கள். புகையிலை லாபிக்கு ரூ 5000 கோடி தருவதாக சொன்னார்கள். எங்கு எப்படி வேண்டும் என சொல்லுமாறு கேட்டார்கள். நான் நினைத்திருந்தால் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு எப்படியோ இருந்திருப்பேன். ஆனால் எனக்கு பணம் முக்கியமில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் முக்கியம். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன் முக்கியம். நான் மன உறுதியோடு இருந்தேன். பணம் வேண்டுமானால் எப்படியும் சம்பாதிக்கலாம். நமது கட்சியின் நற்பெயர்தான் முக்கியம்.
இன்னும் 8 மாதங்களில் இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பாமகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். திமுக பாமகவுக்கு துரோகம் செய்தது. பாமகவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். நாம யார எதிர்க்கணும், நமக்கு யாரு எதிரி? அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல.. பலம்.. திமுக மூலமாக நமது கட்சியில் நடக்கும் சூழ்ச்சியை நிச்சயம் முறியடிப்போம். இவ்வாறு அன்புமணி பேசினார்.