அமர்நாத்தை வேட்டையாடுவதால் தமிழின் தொன்மையை மறைக்க முடியுமா?: சு.வெங்கடேசன்!

கீழடி ஆய்வறிக்கையை தாக்கல் செய்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணிமாற்றம் செய்யப்பட்டதை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கீழடி அகழாய்வு குழுவில் இருந்து பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இன்றைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமல்ல, ஆவணப்படுத்தும் பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். ஒரு அதிகாரி பணியிடமாற்றம் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அது நிர்வாக நடைமுறையில் உள்ள ஒரு விஷயம்தான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் விஷயத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக கீழடி அகழாய்வில் அதன் உண்மைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக பணியாற்றியவர். அப்படிப்பட்டவரை அகழாய்வை நீங்கள் தொடர வேண்டாம் என்று 2017 ஆம் ஆண்டு வெளியேற்றினார்கள். அதேபோல் அவர் மேற்கொண்ட கீழடி அகழாய்வின் அறிக்கையை நீங்கள் எழுத வேண்டாம் என்று கூறி இன்னொரு அதிகாரி எழுத இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

அதற்குப்பின் நீதிமன்றம் நாடி நான் அகழாய்வு செய்த இடத்தை நான்தான் அறிக்கை எழுத வேண்டும் என்றும் அதுதான் மரபு, அதுதான் சரி என்று நீதிமன்றத்தில் அமர்நாத் வழக்கு தொடுத்தார். இதையடுத்து அமர்நாத் ராமகிருஷ்ணன்தான் அந்த அறிக்கையை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதற்குப் பிறகு கூட கவுகாத்தியில் இருந்து கோவாவிற்கு மாற்றப்பட்டார், சென்னைக்கு மாற்றப்படவில்லை. அதனால்தான் அவர் அந்த ஆய்வு அறிக்கையை எழுத முடியாமல் இருந்தது. பின்னர் நீதிமன்றத்தை நாடி தான் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகுதான் அவர் ஆய்வு அறிக்கை எழுதி ஒப்படைத்தார்.

ஒப்படைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த அறிக்கையை எப்போது வெளியிடுவீர்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின்பு 11 மாதத்தில் வெளியிடுவோம் என்று ஏஎஸ்ஐ சொன்னது. அதற்குப் பின்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். பின்னர் மத்திய கலாச்சார துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அதற்குப் பின்பு தான் விரைவில் வெளியிடுவோம் என்று நாடாளுமன்றத்தில் உறுதி கொடுத்தார்கள். அந்த உறுதி மொழியை கூட காப்பாற்றவில்லை. கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மே 21ஆம் தேதி நீங்கள் செய்த அகழாய்வு கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்கள். கூடுதல் ஆதாரம் வேண்டும் என்றால் இவர்கள் நீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கலாம். இப்போது கடைசி கட்டத்தில் வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாகதான் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் கடந்த 10ஆம் தேதி சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில், “இதை அரசியலாக பார்க்காதீர்கள். கூடுதலாக அறிவியல் ஆதாரம் தேவை” என்று சொன்னார். இந்தப் பின்னணியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆவணப்படுத்தும் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு இயக்குனர் அந்த ஆவணப்படுத்தும் பிரிவில் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள் என்று கேட்டேன். அனேகமாக இவர் மட்டும்தான் அனுப்பப்படுகிறார் என்று தகவல்கள் சொன்னார்கள். ஒரு ஆய்வை நடத்தியதற்காக ஒரு ஆய்வாளர் எப்படி எல்லாம் வேட்டையாடப்படுவார் என்பதற்கு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிகழ்த்தி காட்டிக் கொண்டே இருக்கிறது. மே 23ஆம் தேதி இந்தப் பிரச்சனை சம்பந்தமான அறிக்கையை நான் வெளியிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை 20 நாட்களாக தமிழ்நாட்டில் பேசும் பொருளாக ஆய்வறிஞர்கள், வரலாற்றாளர்கள், தமிழக முதல்வர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக் கொண்டே இருக்கும் நிலையில் இன்று அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு தங்களுடைய கொள்கையில் எப்படி உறுதியாக இருக்கிறது என்பதை தமிழ்நாட்டிற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் மூலம் எடுத்துச் சொல்லும் நடவடிக்கையாக தான் இதை நாங்கள் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு எதிராக, தென்னிந்தியாவின் வரலாற்றுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் பாரபட்சமான நடவடிக்கை இது. தனிமனிதனை இது போன்று வேட்டையாடுவதனால் வரலாற்று உண்மைகளை மறைத்து விட முடியும் என்ற மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழக மக்கள் அரசியல் களத்தில் அதற்கான பதிலை அளிப்பார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.