பவன் கல்யாண், யோகி ஆதித்யநாத் இருவருக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்: சேகர்பாபு!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி இருக்கிறார். ம

மதுரையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தனிந்துள்ள நிலையில், அடுத்ததாக பாஜக முருகன் மாநாடு நடத்த உள்ளது. குன்றம் குமரனுக்கே என்ற அடைமொழியுடன் மாநாடு பணிகள் நடந்து வரும் நிலையில், இந்து முன்னணி தரப்பில் மாநாடு பிரம்மாண்டமாக நடத்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன் 22ஆம் தேதி முருகன் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனிடையே மதுரையில் இந்து முன்னணி சார்பாக நடக்கும் முருகன் மாநாட்டை சங்கி மாநாடு என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சேகர்பாபு கூறியதாவது:-

ஆந்திராவில் உள்ள பவன் கல்யாண், உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? இந்து சமய அறநிலையத்துறை என்பது அறம் சார்ந்த ஒரு துறை. ஒழுக்க நெறிகளை போதிப்பதே அறத்தின் பணி. கோயில், குளம் இல்லாத ஊரில் குடியேற வேண்டாம் என்பார்கள். ஏனென்றால் பக்தி மனிதனை ஒழுக்கப்படுத்தும். ஆனால் இவர்கள் நடத்தும் முருகன் மாநாடு இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுப்படுத்தும் சூழலை ஏற்படுத்தும் மாநாடு.

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 117 முருகன் கோயில்களுக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி இருக்கிறோம். முருகன் கோயிலில் பக்தர்கள் ஆச்சரியம் கொள்ளும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழனியில் மட்டும் ரூ.98 கோடியில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. திருச்செந்தூரில் ரூ.400 கோடியில் கும்பாபிஷேகம் பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதனால் மக்களை பிளவுப்படுத்தும் வகையில் ஒரு சாராராய் வைத்து நடக்கும் மாநாடு தேவையற்றது. பாஜக ஏற்கனவே வேல் எடுத்து கொண்டு சுற்றி சுற்றி வந்தார்கள். ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற முடியவில்லை.

அதேபோல் வடசென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட 4 குடிநீர் ஏடிஎம்-களில் பிரச்சனை ஏற்பட்டது. அது உடனடியாக கவனத்திற்கு வந்து, இன்று காலையில் சரி செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.

அம்மா குடிநீர் திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள் என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கு முன் எந்த பகுதியில் அம்மா குடிநீர் திட்டத்தை உருவாக்கினார்கள். அதனை எப்போது நாங்கள் வேண்டாம் என்று விட்டுவிட்டோம் என்று சுட்டிக் காட்டினால், தகுந்த விடை அளிப்போம். இதுவொரு நல்ல முன் மாதிரியான திட்டம். இதனை இன்னும் கூடுதலான இடங்களில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அவர்கள் செயல்படுத்தி இருந்தால், வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.