இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது!

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவத்தினர் நேற்று இரவு வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சக்ரா டி பக் என்ற பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி ஒரு பெண் இந்திய எல்லைக்குள் நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை கைது செய்த ராணுவத்தினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்டம் ஃப்ரேஷ்பண்டா பகுதியை சேர்ந்த ரோசினா (வயது 49) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ரோசினா விசாரணைக்கு பின் பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.