சீமான் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

‘கள்’ இறக்கும் போராட்டத்தை நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டுமென்று நாங்கள் கோரி வருகிறோம். கள்ளோ, சாராயமோ, பீரோ, பிராந்தியோ அல்லது கஞ்சா போன்ற போதை வஸ்துகளோ எதுவாக இருந்தாலும் தமிழ் சமூகத்தை கெடுக்கக்கூடாது. அதற்காகத்தான் நாங்கள் மக்கள் இயக்கம் நடத்துகிறோம். எந்தவித மலிவான போதைப் பொருளாக இருந்தாலும், அது எளிமையாக சாதாரண மக்களிடத்தில் போய் சேர்ந்து விடும்.

எனக்கு கோயம்புத்தூர் மாவட்டம் என்பது பலருக்கு தெரியும். கள் இறக்கப்பட்ட காலத்தில், சாதாரண அடிதட்டு மக்கள் கணவனும் மனைவியும் சேர்ந்து வேலைக்கு சென்று கள் குடித்துவிட்டு அங்கேயே விழுந்து கிடப்பார்கள். கள்ளு குடிப்பதற்காகவே வேலைக்கு சென்றனர். நாட்கணக்கில் அவர்கள் மயங்கி கிடந்து, அவர்கள் குடும்பம் அழிந்து போனதை கண்கூட கண்டவன் நான். இன்றைக்கு தலித் என்று சொல்லப்படக்கூடிய அருந்ததி இன மக்களும் தேவேந்திர குல மக்களும் தங்களுடைய சொந்த நிலத்தை கள்ளுக்காகவே இழந்த கதை எல்லாம் பல உண்டு. கள்ளு கொடுத்து மயக்கிதான் பல பேருடைய நிலங்களை எழுதி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். தலித் மக்கள் நிலமற்றவர்களாக போனதற்கு காரணம், கள்ளு கொடுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டதுதான். எனவே தமிழ்நாட்டில் எந்த காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் கள் இறக்குவதை அனுமதிக்க முடியாது.

இதே நாளில் ஒரு ஆண்டுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் மலிவு விலையில் கிடைத்ததால் அவர்கள் வாங்கி குடித்து மாண்டு போனார்கள். கள்ளும் மலிவு விலை என்பதால் அது சாமானிய மக்களை எளிதில் சென்று சேரும். மட்டுமல்லாது கள்ளில் எந்த மருத்துவ குணமும் கிடையாது. தமிழகத்தில் எத்தனையோ மருத்துவர்கள் இருக்கிறார்கள். யாராவது, இந்த நோய்க்கு கள்ளு குடியுங்கள் என்று பரிந்துரைத்திருக்கிறார்களா? யாரோ சொல்வதை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சித் தலைவர் கள் உடலுக்கு நல்லது என்று கூறி வருகிறார்.

கள் இருக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது ஏன்? கஞ்சா உலக அளவில் கனடா ஜெர்மனி என 20க்கும் மேற்பட்ட நாடுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் கஞ்சா பயிர் செய்கிறோம் என்று சிலர் கிளம்பினால் போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்க்குமா? எனவே பனைமரம் ஏறி கள் இறக்கிய சீமான் மீது முதலில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.