நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
2025 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடமளித்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், மருத்துவர்கள் மீது குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:-
நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மாநாடுகளில் உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
