இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ‘கில்லர்’ எனும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிகராக மிரட்டிவரும் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குராக களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக 2015-இல் இசை எனும் படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் எனும் புதிய படத்தை இயக்குகிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டீடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் தயாரிகிறது.
பான் இந்திய படமாக உருவாகும் இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வந்துவிட்டார். இது எனது கனவு திரைப்படம். புகழ்பெற்ற கோகுலம் கோபாலன் சாருடன் இணைந்தது மகிழ்ச்சி. ரசிகர்களாகிய உங்களது அன்பும் ஆசிர்வாதமும் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
கடைசியாக எஸ்.ஜே.சூர்யா நடித்த ராயன், சரிபோதா சனிவாரம், வீர தீர சூரன் -2 என அனைத்துமே ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
