தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் ‘அப்பா ஸ்டாலின்’ அடமானம் வைத்துள்ளார்: ஆர்பி உதயகுமார்!

ஆட்சி அதிகாரத்திற்காக தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை எல்லாம் ‘அப்பா ஸ்டாலின்’ அடமான வைத்துள்ளதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வீண் பழி சுமத்துவது நியாயமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது:-

தமிழக நலனை, தமிழக உரிமையை அப்பா ஸ்டாலின் நீங்கள் அடகு வைத்துள்ளது உங்களுக்கு தெரியாதா? முல்லைப் பெரியார் அணையில் 142 அடியாக தேக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது தெரியாதா அப்பா ஸ்டாலின் அவர்களே? வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ என்று நீங்கள் பேசி வருவதை மக்கள் வரவேற்க தயாராக இல்லை.

கேரளாவில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. ஆனால் அங்கே முல்லைப் பெரியாரின் ரூல்கர்வ் மூலம் கேரளா முனைப்பு காட்டி வருவதால் அங்கே 142 அடியை தேக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை நம்பித்தான் பாசனம் மற்றும் தண்ணீர் தேவைக்காக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள ஏழு லட்சம் விவசாய குடும்பங்கள் பாசனத்தை நம்பியும், 80 லட்சம் மக்கள் குடிநீரை நம்பி உள்ளனர். 1979க்கு முன்னர் 2.31 லட்சம் இருந்த பாசனப்பரப்பு, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்த பின்பு தற்போது 1.71 லட்சமாக குறைந்து விட்டது என்பதை விவசாயிகள் கண்ணீரோடு கவலையோடு தெரிவிக்கிறார்கள். அதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கேரளா அழுத்தத்தின் காரணமாக 136 அடியாக குறைத்ததன் காரணமாக பாசன பரப்பு குறைந்தது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன.

இதற்கு நிரந்தர தீர்வு காண புரட்சித்தலைவி அம்மா ஒரு நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி கண்டார்கள். அணையை 152 அடியாக உயர்த்தினாலும், அணை பாதுகாப்பாக இருக்கும் என்ற பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20.11.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் அணையின் நீரை 142 அடியாக தேக்கி கொள்ளலாம், பேபி அணையை பழுதுபார்க்கப்பட்ட பின் 152 அடியாக தேக்கி கொள்ளலாம் என்கிற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உறுதி செய்த பின் 7.12.2015, 15.10.2018 ஆகிய தொடர்ந்து மூன்று முறை 142 அடியாக நீரை அம்மா ஆட்சியில் உயர்த்தினோம். அப்பா ஸ்டாலின் அவர்களே? நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று இந்த நான்கரை ஆண்டு காலங்களிலே ஒரு முறையாவது 142 அடியை உயர்த்துவதற்கு நீங்கள் முயற்சி எடுத்தீர்களா?

தமிழகத்தினுடைய வாழ்வாதார உரிமையை அடமானம் வைத்தது, கூட்டணி கட்சிகளுக்காக மட்டுமல்ல உங்களுடைய ஆட்சி அதிகாரத்திற்காக? இங்கே உங்கள் பிள்ளை முதலமைச்சராக வருவதற்காக எந்த சக்தியும் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த தமிழகத்தின் வாழ்வாதாரத்தை, ஜீவாதார உரிமைகளான முல்லை பெரியாறு, காவிரி, கச்சதீவு, பாலாறு என்று அத்தனையும் அடமானம் வைத்த அப்பா ஸ்டாலினே? தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு கண்ணீரோடு கவலை தெரிவிக்கிறார்கள் உங்களுக்கு தெரியாதா? அதை விடுத்து, அதை மறந்து, அதை மறைக்க நீங்கள் திசை திருப்புகிற நாடகத்தை நீங்கள் என்நாளும் நடத்த முடியாது என்பதை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

ஆகவே இதுவரை நீங்கள் நடத்தி வந்த ரோடுஷோ என்கிற மேஜிக் ஷோக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவுரை எழுத தமிழ்நாடு மக்கள் தயாராகிவிட்டார்கள். இனி ரியல் ஹீரோவாக ரியல் ஷோ நடத்த மக்களை காக்க, தமிழகத்தை மீட்க புறப்பட்டு விட்ட எடப்பாடியாரை மக்கள் வரவேற்க தயாராகிவிட்டனர் தமிழகம் முழுவதும் இனி எடப்பாடி அலை வீசும். இவ்வாறு அவர் கூறினார்.