தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழக கட்சிதான் தலைமை தாங்க வேண்டும்: பிரேமலதா!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழக கட்சிதான் தலைமை தாங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கிருஷ்ணகிரியில மா விளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கட்டாய கல்வி குறித்த கேள்விக்கு, அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டும், படித்தால் மட்டும்தான் எதிர்காலம் பிரகாசமாக சொந்தக்காலில் நிற்க முடியும். ஒவ்வொருவரும் தமிழ்நாட்டில் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் தேமுதிகவின் விருப்பம்.

பல ஆண்டு காலமாக, தொடரும் நட்பின் வெளிப்பாடாக சுதீஷ், காங்கிரஸ் சார்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கும் கூட்டணிக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய நாள் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழக கட்சிதான் தலைமை தாங்க வேண்டும். கூட்டணி கட்சி என்று வந்தால் வரவேற்கக் கூடிய ஒன்றுதான். யார்? வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் வரவேற்கலாம். எத்தனையோ மாநிலங்களில் அது சாத்தியமாக இருக்கிறது.

ஸ்ரீகாந்த் குறித்த கேள்விக்கு, இதை அவர்கள் மட்டுமே பயன்படுத்தியதாக எடுத்துக்கொள்ள கூடாது, தமிழகமே போதை வஸ்துக்களால் மூழ்கி இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாத விஷயம். அவர்கள் செய்த தவறுக்கான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும்.

இந்த அரசு போதை இல்லா, டாஸ்மாக் இல்லா, கள்ளச் சாராயம் இல்லா ஒரு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். நான் அறிவுரை கூற வேண்டிய வயது விஜய்க்கு இல்லை, அவருக்கான முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அதே போல மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசு இணைந்து மக்களுக்கு நல்லது செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.