சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலையில் வேறு யாரேனும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என தேடும் பணியிலும், தீயை அணைக்கும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தின்போது தொழிலாளர் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தகைய வெடிவிபத்து சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதும், அப்பாவித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்கின்ற வகையில் பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.
அதிகாரிகளின் உரிய கண்காணிப்பு இல்லாத நிலையில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைகளின் இறுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பான முறையில் பட்டாசு தொழில் தொடர்ந்து நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் அரசு செலவில் உயரிய சிகிச்சையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
