அவிநாசி பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தலையிடாது என்றும், இந்தப் பேரியக்கம் பாதிக்கப்பட்டோரின் பக்கமே நிற்கும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணனின் பேரன் தான் இந்த கவின்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. அரசியல் அழுத்தத்தால் கவின்குமார் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக ரிதன்யாவின் தாய் பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறியதாவது:-
உங்களுக்கு ஒரு 75 வயதாகிறது என வைத்துக் கொள்வோம். உங்கள் வீட்டில் உங்கள் பேரன் செய்யும் தவறுக்கு எப்படி நீங்கள் பொறுப்பாக முடியும்? அதுபோல்தான் ரிதன்யா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலையிடாது. அப்படி யாராவது தலையிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
காங்கிரஸ் எனும் மாபெரும் பேரியக்கமானது எப்போதுமே பாதிக்கப்பட்டோரின் பக்கம்தான் நிற்கும். இந்தத் தற்கொலை சம்பவம் நடந்ததுமே தகவல் அறிந்து நான் அந்தக் குடும்பத்தினரிடம் பேசினேன். அப்போதும் கூட அவர்களிடம் நான் சொன்னது இதுதான் – எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான். தைரியமாக இருங்கள். எங்கள் கட்சியினர் யாராவது தலையிட்டால் சொல்லுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன்,” இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
ரிதன்யாவின் கணவர் கவின்குமாரின் தாத்தா, திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பதால், இந்த வழக்கில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ரிதன்யாவின் தாய் புகார் கூறியிருந்தார். மேலும் இதில் அரசியல் தலையீடும் அழுத்தமும் இருப்பதால் தங்கள் பெண்ணுக்கு நீதி கிடைக்காதோ என்ற கவலை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த 27 வயது ரிதன்யா, வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட வழக்கு, தமிழகத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூன் 28ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம், வரதட்சணைக் கொடுமையின் கோர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு காரில் புறப்பட்ட ரிதன்யா, கைகாட்டிப்புதூரில் காருக்குள்ளேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன், தனது தந்தைக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், 500 பவுன் நகை வரதட்சணையாகக் கேட்கப்பட்டதாகவும், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்ததாகவும் கதறி அழுதபடி தெரிவித்திருந்தார்.
திருமணத்தின்போது 300 பவுன் நகை, ரூ.70 லட்சத்திற்கு சொகுசு கார் மற்றும் ரூ.2.25 கோடி செலவில் திருமணம் நடத்தப்பட்டதாகவும், மீதி 200 பவுன் நகையை எப்போது கொடுப்பார்கள் என கவின்குமார் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும் ரிதன்யாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சேயூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்தனர். மாமியார் சித்ராதேவி தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அவரும் கைது செய்யப்பட்டுவிட்டார். ரிதன்யா இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை வாக்குமூலமாக எடுத்துக் கொள்வதால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
