நடிகர் விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எந்த வகையிலும் தேர்தலில் எதிரொலிக்காது என்றும், அவர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சம் 2 முதல் 3 சதவீதம் மட்டுமே வாக்குகளைப் பெறுவார் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். அதன் பிறகு அவர் தி.மு.க.வுடன் இணைந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆகிவிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்ட்கள், மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் ஆகியோர் இணைந்து, தமிழகத்தில் எப்படியாவது ஒரு தமிழன் முதல்வராக வேண்டும், ஒரு கிறிஸ்துவரை முதல்வராக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கியதுதான் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.). பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி பேசுவதற்கு விஜய்க்கு எந்த அருகதையும் இல்லை. தமிழக வெற்றிக் கழகம் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும். அவர் கிறிஸ்தவ நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படுகிறார். விஜய், தி.மு.க.வின் ‘ஏ டீம்’ தான். தி.மு.க. எப்படி மத்திய அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவதூறு பரப்புகிறதோ, அதேபோல தி.மு.க. செய்ய வேண்டிய வேலையை இன்னொரு தளத்தில் இருந்து விஜய் செய்கிறார்.
கடந்த தேர்தலில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனை தயார் செய்தார்கள். இந்தத் தேர்தலுக்கு ஜோசப் விஜய்யைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள். ஆகையால், த.வெ.க. மக்களால் புறக்கணிக்கப்படும். த.வெ.க. தலைவர் விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எந்த விதத்திலும் எதிரொலிக்காது; சாதக பாதகத்தை ஏற்படுத்தாது. அவர் இந்தத் தேர்தலில் நிச்சயமாக 2 அல்லது 3 சதவீத வாக்குகளைப் பெறுவார். அதற்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தி.மு.க.வுடன் இணைந்தாரோ, அதேபோல் ஜோசப் விஜய் சென்று தி.மு.க.வுடன் இணைவார். இதனால் எந்தப் பாதிப்பும் இருக்காது.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு நடந்த அதே இடத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா முஸ்லிம் முன்னேற்ற மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இந்த மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.
திருப்புவனத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார், காவல்துறையினரால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, “சாரிம்மா” எனச் சொல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும். சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய தந்தை, மகன் காவல்துறைத் தாக்குதலில் கொல்லப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர். ஆனால், தற்போது அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டபோது குரல் கொடுக்கத் தயங்குகிறார்கள். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒரு தரப்பினர் இவ்வாறு செயல்படுகிறார்கள். அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவைப் பாதுகாக்கும் அந்த ‘சார்’ யார் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
