மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மாணவியின் தந்தை முன்வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் செயல்பட்ட வரும் சக்தி தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மரண சம்பவம் நேற்று வன்முறையாக வெடித்தது. இதன் சம்பவங்கள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக, தமது மகளின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அந்த குழுவில் தங்களது தரப்பு மருத்துவர் ஒருவரையும் இடம்பெற செய்ய வேண்டும் எனவும் மாணவியின் தந்தை தரப்பில் கோரிககை முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை நிராகரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். இதற்காக, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜீலியான ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலநாதன் மற்றும் தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குனர் சாந்தகுமாரி அடங்கிய மருத்துவர் குழுவையும் நியமித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த மறு பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, மாணவியின் தந்தை, தமது வழக்கறிஞருடன் இதில் கலந்து கொள்ளவும் அனுமதித்தார்.

ஆனால், மறு பிரேத பரிசோதனையில் தங்களது தரப்பில் ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, மாணவியின் தந்தை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் இந்த உத்தரவில் தலையிட முடியாது எனவும், மனுதாரர்கள் விரும்பினால் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று அறிவுறுத்தியது.