தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும், பாஜகவால் வெற்றிபெற முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 முறை தமிழ்நாட்டிற்கு பயணம் வந்துவிட்ட நிலையில், பாஜகவினர் உற்சாகமாகி இருக்கின்றனர். அதற்கேற்ப மதுரையில் நடந்த முருகன் மாநாடு அக்கட்சியினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் பாஜக தரப்பில் நெல்லையில் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்தில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தேதிகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 23 முதல் 27 வரை 5 நாட்கள் விழாவாக கொண்டாடப்படவுள்ளது. இதில் கடைசி நாளான ஜூலை 27ஆம் தேதி நடக்கவுள்ள திருவாசகம் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் ஜூலை 28ஆம் தேதி பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். பிரதமர் மோடி வருகையின் போது பாஜக மற்றும் அதிமுக தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற உள்ள கட்சிகள் குறித்த ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும், வெற்றிபெற முடியாது. கடந்த தேர்தலின் போது நாட்டில் உள்ள அனைவரின் பார்வையும் ராமநாதபுரம் தொகுதியில்தான் இருந்தது. ஆனால் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட நவாஸ் கனி வென்றார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று மோடி பிரார்த்தனை செய்கிறார். தமிழ்நாட்டில் என்ன செய்ய நினைத்தாலும் வேலும், முருகனும் திமுகவில் தான் இருக்கிறார்கள். கடந்த முறை 5 படை வீடுகளில் திமுக வெற்றி பெற்றது. பாஜகவின் முருகன் மாநாட்டிற்கு பிறகு வரும் தேர்தலில் அறுபடை வீடுகளிலும் திமுக கட்டாயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
