தவெக தலைவர் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை: கார்த்தி சிதம்பரம்!

“தவெக தலைவர் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை. எப்போதுமே தமிழ்நாட்டில் அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். அந்த வாக்கு பெரும்பான்மையாக விஜய்க்கு செல்லலாம்” என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தற்போதைய ஆட்சி காலம் இருண்ட காலம் என்பது சொல்வது சரியல்ல. அவர் மூன்று தேர்தலில் தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளார். நான்காவது தேர்தலிலும் தோல்வியை தழுவ உள்ளார். எதையாவது ஒன்றை உருட்டி புரட்டி பார்க்கலாம் என்று செயல்படுகிறார். 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி செய்து தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தினால்தான் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினார்கள். அதனால் மீண்டும் மக்கள் அதிமுகவை நோக்கி செல்வார்கள் என்று நான் நம்பவில்லை. மேலும் அதிமுக பாஜகவோடு பயணம் செய்வதால் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்.

2026 தேர்தல் நான்கு முனையாக இருக்கலாம். விஜய்க்கு என்று எனர்ஜி இருக்கிறது அவருக்கென்று ஒரு பகுதியில் வரவேற்பு இருக்கிறது. ஆனால் அது சீட்டுகளாக மாறுமா என்று தெரியவில்லை. இன்று இருக்கும் நிலையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மூன்றாவது அணியாக இருக்கும்போது சீமான் யாருடைய வாக்கை எடுத்தார் என்று யாருக்கும் தெரியாது. அதேபோல் தற்போது மூன்றாவது அணியாக இருப்பவர்கள் யார் அது வாக்கை எடுக்கிறார்கள் என்று தெரியாது. விஜய்க்கு வாக்குகள் விழும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர் யார் வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை. எப்போதுமே தமிழ்நாட்டில் அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். அந்த வாக்கு பெரும்பான்மையாக விஜய்க்கு செல்லலாம். ஏற்கனவே ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கக்கூடிய உறுதியான வாக்குகள் விஜய்க்கு செல்லுமா என்று தெரியவில்லை.

மக்களுக்கு நன்மை பயக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தற்போது கூறும் நிலையில் ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை? மோடி தான் இந்தியாவிற்கு பிரதமராக வரவேண்டும் என்று பிரச்சாரத்தை அவர் செய்திருக்கலாமே? நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு காலம்தான் ஆகிறது. அப்போது கூட்டணியில் சேர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாதவர்களுக்கு ஒரு வருடத்தில் என்ன மனமாற்றம் வந்தது? என்ன புதுமையை பாஜகவிடம் கண்டார்கள்? என்னைப் பொறுத்தவரை அதிமுக செய்தது தந்திர தவறு. அதிமுகவில் உள்ள அடிமட்ட தொண்டன் அதிமுக பாஜகவோடு வைத்துள்ள கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. நடுநிலையாக இருப்பவர்களும் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை.

எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். மொத்தமாக தராசில் வைத்து பார்க்கும்போது எந்த அரசு சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது? யார் ஆட்சி செய்ய வேண்டும்? யார் ஆட்சி செய்யக்கூடாது? என்பதையெல்லாம் பொறுத்துதான் மக்கள் வாக்களிப்பார்கள். அப்படி வாக்களிக்கும்பொது என்னை பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.

அனைத்துக் கட்சிகளுமே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் நமது பிரதிநிதிகள் அரசாங்கத்தில் இடம்பெற வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இது யதார்த்தமான எதிர்பார்ப்பு தான். காங்கிரஸ் கட்சி 1967க்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு பெறவில்லை. அந்த வாய்ப்பு மீண்டும் வந்தால் அதனை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னை போன்றவர்களின் கருத்து. தேர்தல் முடிவை பொருத்து தான் இது சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பது தெரியவரும். இன்றே அதைப் பேசித்தீர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்ற பின்னர் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஆந்திராவை எடுத்துக் கொண்டால் சந்திரபாபு நாயுடு தனி பெரும்பான்மை வந்தாலும் கூட்டணி கட்சிகளை ஆட்சியில் சேர்த்துள்ளார். அந்த மாதிரியான நிலை தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் வந்தால் அதனை நான் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.