தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும்: வேல்முருகன்!

பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவருக்கான தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை செயலகத்தில் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு காரணமாக யாரக இருந்தாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.

ஒரு பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருக்கிறார் என்றால், அவரது உடம்பில் எப்படி கீறல் இருக்கும்? மாவட்ட நிர்வாகம் நேற்று வரை இதுதொடர்பாக விசாரணை செய்யவில்லை? மாணவர்களை முன்கூட்டியே பள்ளிக்கு வர வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் என்ன?

அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்டோர் ஆய்வு செய்ததை வரவேற்கிறேன். ஆனால் மூன்று நாட்களாக விசாரிக்காமல் இருந்தத்தற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கு காரணமா? அரசு அதிகாரிகள் ஒரு சில பேர் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு உடந்தையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வரை சந்திக்க இருக்கிறேன். இறந்த பெண்ணிற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த பெண்ணின் தாய்க்கு அரசு வேலை அளிக்க வேண்டும்.

பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும். இதுபோன்ற பள்ளி நிர்வாகத்தை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.