திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் உள்ளன: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாகை மாவட்டத்திற்கு நேற்று (ஜூலை 18) இரவு வருகை தந்த பழனிசாமி, கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாக இன்று (ஜூலை 19) நாகையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் உள்ளன. ஸ்டாலின், அவர் மனைவி, மகன், மருமகன் ஆகியோர் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் அமர வைத்த மக்களைப் பற்றி சிந்திக்காமல் வீட்டில் உள்ளவர்களை மட்டுமே சிந்திக்கிறார்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்தோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டது. உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்று தந்தோம். மக்கள் விரும்பும் ஆட்சியில் அதிமுக கொடுத்தது, அதனால் மக்கள் மத்தியில் எங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

விவசாய விரோத ஆட்சி மக்களுக்குத் தேவையா? 50 மாதங்களில் நாகை மாவட்டத்துக்கு ஏதேனும் பெரிய திட்டத்தை திமுக அரசு கொண்டுவந்ததா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.