தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை. தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப் பட்டு உள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த மாதத்தில் பயணிகளுக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அல்லது கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. யாருக்காவது தொற்று கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஒரு படுக்கை வசதியுடன் கூடிய அறை கோவை விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளது.

மேலும் தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், தமிழக- கேரள எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகளுக்கு முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் பகுதியில் புதிதாக கொப்பளங்கள் உள்ளதா என்றும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குரங்கு அம்மை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் ஸ்லைடுகள் மற்றும் போஸ்டர்கள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. நகர பகுதிகளில் பொது சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.