மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சஞ்சய் ராவத்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு 40 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவாக உள்ளது. இந்தநிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளனர். அவர்கள் பொறுப்பேற்ற 17 நாட்கள் ஆன பிறகும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், “2½ லட்சம் மக்கள் உள்ள பர்போடாசுக்கு 27 மந்திரிகள் உள்ளனர். ஆனால் 12 கோடி மக்கள் உள்ள மகாராஷ்டிராவிற்கு 2 மந்திரிகள் மட்டுமே உள்ளனர். அரசியல் அமைப்பு இங்கு எங்கு உள்ளது?. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மந்திரி சபையில் முதல்-மந்திரியுடன் சேர்த்து 12 மந்திரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சொல்கிறது. எனவே கடந்த 2 வாரமாக 2 நபர் மந்திரி சபை எடுக்கும் அனைத்து முடிவுகளும் சட்டத்தின்படி செல்லாது. மரியாதைக்குரிய கவர்னரே, இங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது?” என கூறியுள்ளார்.

இந்நிலையில் சிவசேனா எம்.பி.க்கள் பலரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ இருப்பதாக கூறப்பட்டது. இந்த தருணத்தில் தான் ஜனாதிபதி தேர்தல் வந்தது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான சிவசேனா எம்.பி.க்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் போர்க்கொடி தூக்கினர். எனவே எம்.பி.க்கள் அளவில் கட்சி உடைவதை தடுக்க திரவுபதி முர்முக்கு ஆதரவளிக்க சிவசேனா தலைமை முடிவு செய்தது. இருப்பினும் இந்த விஷயத்தில் எம்.பி.க்களின் அழுத்தத்திற்கு பணியவில்லை என்றும், தனது கட்சியை சேர்ந்த பழங்குடியின பிரமுகர்கள் கேட்டுக்கொண்டதால், இந்த முடிவை எடுத்ததாகவும் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காணொலி மூலம் சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்தினர். இதில் சிவசேனாவின் மொத்தம் உள்ள 19 எம்.பி.க்களில் 12 பேர் கலந்து கொண்டனர். இதற்கிடையே சிவசேனாவை சேர்ந்த எம்.பி. ஒருவர் கூறியதாவது:-

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நடத்திய ஆன்லைன் கூட்டத்தில் 12 எம்.பி.க்கள் கலந்து கொண்டோம். நாங்கள் மக்களவையில் தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து முறைப்படி கடிதம் கொடுக்க உள்ளோம். மக்களவையில் எங்களது குழுவின் தலைவராக மும்பையை சேர்ந்த எம்.பி.யான ராகுல் செவாலே செயல்படுவார். இவ்வாறு அவர் கூறினார். 12 சிவசேனா எம்.பி.க்கள் தனிக்குழுவாக செயல்பட போவதாக அறிவித்து இருப்பது, உத்தவ் தாக்கரேக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.