விவசாயிகள் கடன் வாங்க வரும்போது சிபில் கேட்பது சரியாக இருக்காது: அண்ணாமலை!

விவசாயிகள் கடன் வாங்க வரும்போது சிபில் கேட்பது சரியாக இருக்காது என்பதே பாஜகவின் கருத்து என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. அந்த தேர்தலில் பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தார். இந்தச் சூழலில் இப்போது தமிழக தேர்தல் களம் மொத்தமாகவே மாறிவிட்டது எனச் சொல்லலாம். அதிமுக பாஜக மீண்டும் கூட்டணியை அமைத்துள்ளன. 2026 சட்டசபைத் தேர்தலை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துச் சந்திக்கவுள்ளன. இதனால் ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில் பிரதமர் மோடியின் தமிழக பயணத்தின் போது அவரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், இந்த பயணத்தில் மோடியை ஓபிஎஸ் சந்திக்கவில்லை. இதனால் ஓபிஎஸை பாஜக ஓரம் கட்டுவதாக எல்லாம் செய்திகள் வெளியானது.

இந்தச் சூழலில் மோடியின் தமிழக பயணம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து ஒரே வரியில் பதிலளித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு அவர், “இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. பிரதமர் மோடியைச் சந்திக்க ஒபிஎஸ் நேரம் கேட்டிருந்தாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த விவகாரத்தில் யூகித்து பதில் சொன்னால் அது சரியாக இருக்காது” என்று மட்டும் பதிலளித்தார்.

தொடர்ந்து தமிழகத்திற்கான பாஜகவின் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர் கூறியதாவது:-

நதி நீர் இணைப்பு என்பது பாஜகவின் கனவு. பாஜகவின் கொள்கை என்றும் சொல்லலாம். நாம் இப்போது 2014ல் இருந்து பார்த்தால் 3வது ஆட்சியில் இருக்கிறோம். ஒவ்வொரு திட்டமாக பாஜக நிறைவேற்றி வருகிறது. விரைவிலேயே நதி நீர் இணைப்பையும் நடத்திக் காட்டுவோம். இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி எனப் பல வேலைகள் இருக்கிறது. ஆனால், நிச்சயம் நதி நீர் இணைப்பைச் செய்து காட்டுவோம். அதில் குறிப்பாகக் கோதாவரி, காவிரி நதிகளை இணைப்போம். கங்கை நதிகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டும். படிப்படியாக இதற்கான பணிகளைச் செய்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் வட இந்தியாவில் ஏற்படும் வெள்ளத்தால் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பில் மக்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. மறுபுறம் தென்னிந்தியாவில், குறிப்பாக வறட்சி தொடர்ந்து இருக்கிறது. நமது தமிழகத்தில் மாநிலத்திலேயே உற்பத்தியாகும் பெரிய நதி எதுவும் இல்லை. இதனால் கோதாவரி- காவிரி நதி நீர் இணைப்பு முக்கியமானதாக இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து சிபில் ஸ்கோர் குறித்துப் பேசிய அவர், “எதிர்க்கட்சி தலைவர் சிபில் ஸ்கோர் அமைப்பில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் கொண்டு வருவது கடினம். அது புரிகிறது. அதேநேரம் மத்திய அரசு எங்கும் யாரிடமும் சிபில் ஸ்கோர் வைத்திருக்கச் சொல்லவில்லை. அந்தத்தந்த வங்கிகளே இதைப் போடுகிறது. விவசாயிகள் மாதாமாதம் சம்பளம் வாங்குவோர் இல்லை. அப்படி மாதாமாதம் சம்பளம் வாங்கி இஎம்ஐ கட்டினால் சிபில் வரும். ஆனால், விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை அறுவடையில் தான் வருமானம் வரும். எனவே, அவர்களுக்கு சிபில் ஸ்கோர் போடவே முடியாது. எனவே, விவசாயிகள் கடன் வாங்க வரும்போது சிபில் கேட்பது சரியாக இருக்காது என்பதே பாஜகவின் கருத்து” என்றார்.