“நான் சூர்யா சாருடன் பணிபுரிய விரும்புகிறேன்” என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இதில் ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் பான் இந்தியா அளவில் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரிக்கு புரமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் சென்றிருந்தார். இது அவர் படித்த கல்லூரி ஆகும்.
அந்த புரமோஷன் நிகழ்ச்சியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசும் போது, “2003-2006 காலகட்டத்தில், கல்லூரியில் படிக்கும் போது, நாங்கள் பார்த்த பெரும்பாலான படங்கள் சூர்யா சாரின் படங்கள்தான். ஆயுத எழுத்து, பிதாமகன், மாயாவி, காக்க காக்க போன்ற படங்களை பார்த்தோம். நான் சூர்யா சாருடன் பணிபுரிய விரும்புகிறேன். இருவருக்கும் சரியான நேரம் அமையும் போது நிச்சயம் சூர்யா சாரை வைத்து படம் இயக்குவேன்” என்று பேசினார்.
