நெல்லை ஆணவக் கொலை.. சாதிய அருவருப்பின் அட்டூழியம்: மாரி செல்வராஜ் கண்டனம்!

நெல்லையை சேர்ந்த ஐடி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்த இயக்குநர் மாரி செல்வராஜ், நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார் (28). இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நோயால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த இளைஞர் ஒருவர், கவின்குமாருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவின்குமாரை நோக்கிப் பாய்ந்துள்ளார். இதனால் பயந்த கவின்குமார், உயிரைக் கையில் பிடித்து ஓடினார். ஆனாலும் அந்த இளைஞர், கவினை துரத்திப் பிடித்து சரமாரியாக வெட்டினார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கவின்குமார் அதே இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த இளைஞர் பாளையங்கோட்டை காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெயர் சுர்ஜித் எனக் கூறினார். அவருடைய தந்தை சரவணன், மணிமுத்தாறு பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணியாற்றி வருகிறார். அதுபோல் அவருடைய தாயார் கிருஷ்ணகுமாரி, ராஜபாளையம் பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணியாற்றி வருகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணையில் சுர்ஜித் கூறுகையில், நானும் எனது சகோதரியும் தூத்துக்குடியில் படித்துக் கொண்டிருந்தோம். அதே பள்ளியில்தான் கவினும் படித்தார். அப்போதே இருவருக்கும் காதல் இருந்தது. இருவரும் வெவ்வேறு கல்லூரிகளுக்குச் சென்ற நிலையிலும் இந்த காதல் தொடர்ந்தது. இந்த காதலுக்கு என் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அதையும் மீறி என் சகோதரியுடன் கவின்குமார் பழகியது எனக்கு பிடிக்கவில்லை. மேலும் அவர் மாற்று ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவரை எனக்கு பிடிக்கவில்லை. சம்பவத்தன்று என் சகோதரி பணியாற்றும் சித்த மருத்துவமனைக்கு சென்ற கவின், தனது தாத்தாவுக்கு வைத்தியம் பார்ப்பது போல் சென்று, என் சகோதரியிடம் பேசினாராம். இதை எனக்கு சிலர் தெரிவித்தனர். அப்போது எனக்கு ஆத்திரம் வந்தது. இதனால் அவர் வழக்கமாக வரும் வழியில் காத்திருந்தேன். அவர் வந்ததும் வழிமறித்து அரிவாளால் வெட்டிச் சாய்த்தேன். இதில் நிலைக்குலைந்த அவர் சரிந்து விழுந்து இறந்தார் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாற்று சமூக பெண்ணை காதலித்த நிலையில் அந்த காதலியின் சகோதரன், ஆத்திரமடைந்து கவினை ஆணவக் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் ஐடிகளுக்கு டேக் செய்திருக்கிறார்.