சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

யூடியூபர் மாரிதாஸ் தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சில கருத்துகளை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார் சவுக்கு சங்கர். பின்னர் அந்தப் பதிவுகளை சவுக்கு சங்கர் நீக்கிவிட்டார். இந்நிலையில், தன்னைப் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், அரசியல் பிரமுகர்கள் பற்றி தொடர்ச்சியாக இணைய ஊடகங்களில் பேசி வரும் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.