நெல்லை கவின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன கனிமொழி!

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் வீட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்.பி. கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலம் பகு​தியைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27 ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்ஜித் என்​பவரை பாளை​யங்​கோட்டை போலீ​சார் கைது செய்​தனர். தனது சகோதரியை பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் காதலித்ததால் அவரை சுர்ஜித் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்​றோ​ரான சிறப்பு காவல் படை உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இரு​வரை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் உடலை வாங்​கு​வோம் என உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இதற்​கிடை​யே, கைது செய்​யப்​பட்ட சுர்​ஜித்தை குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் சிறை​யில் அடைக்க மாநகர காவல் ஆணை​யர் நேற்று உத்​தர​விட்​டார். இதைத்தொடர்ந்து, கவின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்​தரவிட்​டுள்​ளது. கவின் உறவினர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட கவினின் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கவினின் குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவினின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சுர்ஜித் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என கவின் பெற்றோர் கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என கவின் பெற்றோரிடம் எம்.பி. கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இப்படிப்பட்ட சம்பவம் எங்குமே நடக்கக்கூடாது என்பதுதான் அனைவரின் விழைவும். பெற்றோர்கள் தங்களது இளம் மகனை இழந்துவிட்டு தவிப்போடு இருக்கும் சூழலில் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என முதல்வர் சார்பில் தெரிவித்தோம். நிச்சயம் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் சூழலை அரசு உருவாக்கும் என உறுதியுடன் கூறுகிறோம். குற்றம் செய்தவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். இந்த கொலைக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும். ஆணவக்கொலைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என பலமுறை நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பி இருக்கிறோம். நிச்சயமாக நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.