முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மதகுகளை இயக்கி சோதனை செய்தனர்.

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையை கண்காணித்து பராமரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 2014-ம் ஆண்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து அணையின் நிலவரம் குறித்து கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் இன்று ஆய்வு செய்தனர். மதகுகள் சோதனை இதற்காக துணை கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் தமிழக பிரதிநிதிகளான முல்லைப்பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் தேக்கடியில் இருந்து படகுகள் மூலம் அணைக்கு சென்றனர். அப்போது அணையின் நீர்மட்டம் 135.90 அடியாக இருந்தது. பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகு பகுதிகள் ஆகியவற்றை இந்த குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் கசிவுநீர் அளவை கணக்கிட்டனர். அது அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப துல்லியமாக இருந்தது. அதன் மூலம் அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர்.

அணையில் உள்ள 13 மதகுகளில் 2, 4 மற்றும் 8-வது மதகுகளை துணை கண்காணிப்பு குழுவினர் இயக்கி சோதனை செய்தனர். அவை சீராக இயங்கின. அணையில் செய்யப்பட வேண்டிய வழக்கமான பராமரிப்பு பணிகள் குறித்து விவாதித்தனர். பின்னர் இந்த குழுவினர் அணையில் இருந்து புறப்பட்டு தேக்கடிக்கு வந்தனர். இதையடுத்து குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணை கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது, வல்லக்கடவு பாதை சீரமைப்பு, அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் செய்யப்பட்டன. இந்த குழுவின் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.