பாஜகவை இன்னும் வலிமையாக ஓபிஎஸ் எதிர்க்க வேண்டும் என்று பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார்.
நேற்று தமிழ்நாடு அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளது. காலையில் தான் ஸ்டாலின்- ஓபிஎஸ் இருவரும் வாக்கிங் செல்லும்போது சந்தித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து திடீரென என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இது அரசியல் அரங்கில் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு ஓபிஎஸ் நேரடியாக வந்திருந்தார். இது அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. ஓபிஎஸ் அணி திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பாகப் பெங்களூர் புகழேந்தி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக புதிய தலைமுறை சேனலுக்கு ஒருங்கிணைப்பாளர் குழு அமைப்பை நடத்தி வரும் புகழேந்தி கூறியுள்ளதாவது:-
அந்தளவுக்குத் தைரியமான ஒரு காரியத்தை ஓபிஎஸ் செய்வார் என்று நான் கருதவில்லை. அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததே ஒரு மாபெரும் புரட்சி என்று நினைக்கிறேன். ஓபிஎஸ் விலகி வந்தால் ஒரு பெரிய மாறுதல் நடக்கும்.. அரசியல் களமே மாறும் என முன்பே நான் சொல்லி இருந்தேன். இப்போது அதுதான் நடக்கிறது. முதல்வரைச் சந்தித்துள்ளார். உடல்நிலை குறித்துச் சந்திக்கப் போவதாக ஓபிஎஸ் தரப்பு சொல்லி இருக்கிறார். ஆனால், இதில் எனது நிலைப்பாடு வேறு.. பாஜகவில் இருந்து விலகிய ஓபிஎஸின் முடிவை முதல்வர் வரவேற்பார். அதற்கு ஆதரவாகக் கூட இருக்கலாம். பாஜக பிடியில் இருந்து வெளியே வந்ததற்காகப் பாராட்டுகிறோம்.. எப்போதும் ஆதரிப்போம் எனக் கூட முதல்வர் சொல்லலாம். அதேநேரம் பாஜக தரப்பு கூப்பிட்டுப் பேசியவுடன் ஓபிஎஸ் நிலைப்பாட்டை மாற்றக்கூடாது. பாஜகவுடன் மீண்டும் ஓபிஎஸ் சேரக்கூடாது. எனவே, முதல்வர் உடனான இந்த சந்திப்பு முக்கியமானது. இந்த உறவு தொடர்வதில் எந்தவொரு தவறும் இல்லை.
பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் சேர்ந்துவிட்டு திராவிட இயக்கங்களை அசிங்கப்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. இந்து முன்னணி கூட்டம், ஆர்எஸ்எஸ் கூட்டம் ஆகியவற்றில் எல்லாம் கலந்து கொள்ள வைத்தவர் எடப்பாடி. எனவே, இந்த சந்திப்பு நல்லதுதான். அதேநேரம் இதை வைத்தே கூட்டணி என்று சொல்ல முடியாது. இது அரசியல் களம். பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அடுத்து என்ன நடக்கும் என்று காலை ஓபிஎஸ் இன்னும் வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டும். எங்களை அவமானப்படுத்திவிட்டார்கள் என்பதை ஓபிஎஸ் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், சொல்லவில்லை. அடுத்த கட்டமாக அவர் மக்களிடம் செல்ல வேண்டும். தமிழகம் முழுக்க 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தயாராக வேண்டும். பாஜகவை இன்னும் வலிமையாக ஓபிஎஸ் எதிர்க்க வேண்டும். தவெகவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதை விஜய் எப்படிக் கொண்டு போகிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதேநேரம் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியே வரக்கூடாது. கேஸ் இன்னும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
