ஓ.பன்னீர்செல்வத்திற்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது: திருமாவளவன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு நல்ல காலம் பிறந்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அடுத்த சில மணி நேரங்களிலேயே முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தார். ஓபிஎஸ் தரப்பை வாசல் வரை வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். சுமார் 50 நிமிடங்கள் வரை ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், பின்னர் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று விளக்கம் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் திமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை.. எதிரியும் இல்லை என்று பதில் கூறியதோடு, எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியைத் தென் மாவட்டங்களில் பலவீனம் அடையச் செய்ய திமுக தரப்பு ஓபிஎஸ் தரப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஓபிஎஸ் புதியக் கட்சியைத் தொடங்கும் திட்டத்தை இருப்பதாகவும் சில தகவல் வெளியாகி இருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக அடைந்த தோல்வி அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைச் சரி செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்று வரும் நிலையில், திடீரென ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்வது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணி பக்கம் ஓபிஎஸ் சாய்வது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், திமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைவதை மகிழ்ச்சியோடு பார்க்கிறேன். ஓபிஎஸ் என்ன நோக்கத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியில் வந்திருப்பதால், அவருக்கு நல்ல காலம் பிறந்திருப்பதாக நம்புகிறேன். தொகுதி பங்கீடு விவகாரம் தொடர்பாக திமுக முடிவெடுத்துக் கொள்ளும். இந்த கூட்டணி வலுப்பெறுவது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.