அகரம் அறக்கட்டளை மூலம் படித்த மாணவனை விமான பயணத்தின் போது சந்தித்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா பேசியதாவது:-
கொடுக்க கொடுக்க குறையாதது கல்வி. அதே போல கொடுக்க கொடுக்க குறையாதது அன்பு என்பதை இங்கே இருப்பவர்களும் நன்கொடையாளர்களும் நிரூபித்திருக்கிறார்கள். நாம் கேட்காமலேயே பலரும் உதவி செய்திருக்கிறார்கள்.
2010-ம் ஆண்டு அமெரிக்கா சென்றேன். அங்கே ஜோதிகாவின் அக்கா இருப்பதால் கோடைக்கால விடுமுறைக்கு குடும்பத்துடன் செல்வோம். அப்போது இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் என்னிடம் பேச வந்தார். ‘அண்ணா நான் அகரம் விதை திட்டத்தில் படித்த 2010 பேட்ச். என்னுடைய பெயர் யோகி’ என்றார். நான் ஆச்சரியமாக பார்த்தேன். எனக்கு அவரை அடையாளமே தெரியவில்லை சரி வங்க யோகி, உங்களை நான் டிராப் பண்ணிவிடுகிறேன் என்று சொன்னேன். இல்லை வேண்டாம்.. எனக்காக லிமோசின் கார் வெளியில் வெயிட் பண்ணுது. நான் அதில் சென்றுவிடுவேன் என்றார். ஆக அது தான் மாற்றம். அவர் அன்று சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. படங்கள் வெற்றிகள் தாண்டி அந்த சந்தோஷம் வேறு மாதிரி இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது: –
கல்வியும், அன்பும் ஒருங்கே கிடைப்பதில்லை. அம்மாவிடம் கிடைக்கும். அகரத்தில் கிடைக்கும். அது பெரிய விஷயம். சினிமா வானில் நட்சத்திரமாக இருப்பதற்கு கொடுக்கப்படும் கிரீடம் வேறு. ஆனால், சமூக வானில் இது போன்ற நற்பணிகள் செய்பவர்களுக்கு முள்கிரீடம் தான் கிடைக்கும். பரவாயில்லை அந்த கிரீடம் போதும் எனக்கு என சொல்வதற்கு மனோ பலம் தேவை. தைரியம் தேவை. ஏனென்றால் உடன் யாரும் நிற்கமாட்டார்கள். சர்வாதிகார, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான்; இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
