திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் தலையை துண்டித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் தளவாய் பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (52). இவர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருந்த போது 100 எண்ணுக்கு வந்த ஓர் அழைப்பில் தந்தை மகன் பிரச்சனை தொடர்பாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரில், குடிமங்கலம் பகுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகனுக்கு இடையே எழுந்த பிரச்சனையில் தந்தை, மகனை கொல்ல அறிவாளியுடன் துரத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், தனது ஓட்டுநருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சண்முகவேலை வெட்டிக் கொலை செய்துள்ளனர். மேலும், ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மகனையும் தந்தை வெட்டியுள்ளார். தந்தை, மகனுக்கு இடையேயான பிரச்சனையை விசாரிக்கச் சென்ற போலீஸ் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
