ஆவின் பொருட்கள் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது!

ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய உப பொருள்களான விலையை இன்று முதல் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்றழைக்கப்படும் ஆவின் நிறுவனம் பால் மட்டுமல்லாமல் அதன் உப பொருள்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தயிர், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தயிர் பாக்கெட்டிற்கான விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தியது.

இந்நிலையில், ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய உப பொருள்களான விலையை இன்று முதல் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.535 ஆக இருந்த நெய் பாட்டில் இன்று முதல் ரூ.580 ஆகவும் 5 கிலோ நெய் ரூ.2,900 ஆகவும், 15 கிலோ நெய் ரூ.9,680 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆவின் தயிர் விலை 1/2 கிலோ ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும், 200 மில்லி ரூ.18 ஆகவும், 400 கிராம் பிரிமியம் கப் தயிர் ரூ.40-லிருந்து ரூ. 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-லிருந்து ரூ.120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 50 கிராம் தயிர் விலை மட்டும் உயர்த்தப்படாமல் ரூ.5 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

200 மில்லி பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27-லிருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15-லிருந்து ரூ.18 ஆகவும், 200 மில்லி மோர் பாட்டில் ரூ.10-லிருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று வியாழக்கிழமை முதல் அனைத்து ஆவின் விற்பனை மையங்கள் மற்றும் முகவர் மையங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.