மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட கமல்ஹாசன் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
இது குறித்து மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.
தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூலை 25 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மநீம கட்சி கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
