“விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே அவரின் முதுகில் குத்தி விட்டனர். நாம் எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
வேலுார் அண்ணா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். ரேஷன் பொருட்கள் பொதுமக்கள் வீடு தேடி வரும். தேமுதிக நிர்வாகிகள் யார் பெரியவர் என்ற ஈகோவை மறந்து வருகின்ற தேர்தலில் பணியாற்றினால் வெற்றி என்ற மூன்றெழுத்து நமக்கு பரிசாக கிடைக்கும். இதன் மூலம் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள். விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது அவரின் முதுகில் குத்தி விட்டனர். கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு பின்னர் இல்லை என்று துரோகம் செய்துவிட்டனர். நாம் எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம். நமக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியினர் என்ற எந்தவித ஆதரவும் இல்லை. நீங்கள் விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “குடியாத்தத்தில் மக்களைத் தேடி மக்கள் தலைவன் கேப்டன் என்ற ரதயாத்திரை தொடங்க இருக்கிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து தொண்டர்களை சந்தித்து பேச இருக்கிறோம். தற்பொழுது முதல் கட்டமாக இந்த நடைபயணம் வரும் 23 ஆம் தேதியோடு நிறைவுக்கு வருகிறது. 25 ஆம் தேதி விஜயகாந்த் பிறந்த நாள் அது எங்கள் கட்சிக்கு திருநாள். அவர் பிறந்த நாள் முடிந்து இரண்டாம் கட்ட பிரசாரம் தொடங்கும். மீண்டும் மக்களை தேடி மக்கள் தலைவன் என்கின்ற சந்திப்பை முடித்த பின்பு தான் யாருடன் கூட்டணி என்பதை நாங்கள் அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
