எம்ஜிஆரை விமர்சித்தால் வரலாறு உங்களை மன்னிக்காது: திருமாவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து விசிக தலைவர் வைத்த விமர்சனம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து திருமாவளவன் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தவறாக பேசவில்லை என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சீட்டுக்காக நீங்கள் திமுகவிடம் மடிப்பிச்சை எடுங்கள். அதற்காக எம்ஜிஆரை விமர்சித்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்று திருமாவளவனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்
கூறியதாவது:-

எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்த கருத்துக்காக விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். அதனால் இந்தப் பிரச்னையை பெரிதாக்க விரும்பவில்லை. ஆனால் அன்பு நண்பர் திருமாவளவனிடம் இதை சொல்லிக் கொள்கிறேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர் தான்.

திமுகவிடம் மடிப்பிச்சை எடுங்கள் அதற்காக தலைவரைப் பற்றியும், அம்மாவைப் பற்றியும் பேசினல் விட மாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி. அதிமுக தொண்டர்கள் அவர்களை விட மாட்டார்கள். தயவுசெய்து அதை நிறுத்திக் கொள்ளுங்கள். திமுகவுக்கு தலைவர் கருணாநிதி. இப்போது திருமாவளவனுக்கும் கருணாநிதி தலைவராகிவிட்டார். கருணாநிதி புகழ் பாடுங்கள், அவருக்கு துதி பாடுங்கள், ஸ்டாலினுக்கு காவடி தூக்குங்கள். அதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை.

அவர்கள் 5 சீட் எதிர்பார்க்கலாம். அதற்கு மடி பிச்சை ஏந்துங்கள். கருணாநிதியை தூக்கி பேசிவிட்டு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை திருமாவளவன் அவமரியாதை செய்வதில் எந்த நியாயமும் இல்லை. இனிமேல் அவர்களைப் பற்றி பேசக் கூடாது. அவரைப்பற்றி என்ன தெரியும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள்.

அன்றைக்கு கர்ணம் என்ற பதவி கிராமம் வாரியாக இருந்தது தெரியுமா. அந்தப் பதவியில் ஒடுக்கப்பட்ட மக்களோ, பிற்படுத்தப்பட்ட மக்களோ, சிறுபான்மை சமுதாய மக்களோ இல்லை. அந்தப் பதவியில் ஆதிக்க ஜாதியினர் மட்டுமே இருந்தனர். அந்த மாதிரி இருக்க கூடாது என்பதற்காக ஒரே கையெழுத்தில் 12,000 பஞ்சாயத்துகளில் அந்த முறையை ஒழித்து, சமூக நீதியை நிலை நிறுத்தும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் அந்தப் பதவியில் வருவதற்கு எம்ஜிஆர் தான் காரணம்.

தற்போது கர்ணம் என்ற பதவி போய், கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வருவதற்கு எம்ஜிஆர் தான் காரணம். திருமாவளவன் அதை மறந்துவிட்டு பேசலாமா. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த அரசுத்துறையிலும் பதவி உயர்வே கிடையாது. அவர்களுக்கு பதவி உயர்வு கொண்டு வந்து உயர்த்தியவர் எம்ஜிஆர். அதை மறக்கலாமா திருமா.

அன்பு நண்பர் திருமா அதை மறக்காதீர்கள். 31 சதவீதம் இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியவர் எம்ஜிஆர். கருணாநிதி 50 சதவீதத்தை 30,20 ஆக குறைத்தார். சமூக நீதியை நிலைநாட்டியவர். கிராமங்கள் ஆதி திராவிடர்கள் வசித்த கிராமங்களில் மின்சாரம் கூட இல்லை. அங்கு ஒரே இணைப்பில் இலவசமாக வெளிச்சம் கொடுத்தவர் எம்ஜிஆர். இதேபோல மணிக்கணக்கில் எல்லா சாதனைகளையும் சொல்ல முடியும். எம்ஜிஆரை கொச்சைப்படுத்தி குறுகிய வட்டத்திற்குள் அடைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது திருமாவளவன் அவர்களே. இனிமேல் எக்காரணம் கொண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து பேசாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.