ராமர் குறித்து சர்ச்சையாக பேசியதற்கு வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் வைரமுத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகன் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து உள்ளிட்ட பலரும் பங்கேற்று இருந்தனர். அப்போது வைரமுத்து கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசினார். அவர் கூறியதாவது:-
சீதையை பிரிந்த ராமன் செய்வதறியாது.. புத்திசுவாதீனம் இழந்துவிட்டான். புத்திசுவாதீனம் இழந்தவன் செய்கின்ற குற்றம்.. குற்றம் ஆகாது என்று சொல்கிறது இந்திய தண்டனை சட்டம்.. இந்திய தண்டனை சட்டத்தின் 84 ஆம் பிரிவு சொல்கிறது புத்தி மாறாட்டத்தால் மதி மயங்கி ஒருவர் ஆற்றுகின்ற காரியத்தை குற்றம் என்று அவன் மீது சுமத்த முடியாது என்று சொல்கிறது இந்திய தண்டனை சட்டம். 84 ஆம் பிரிவு கம்பனுக்கு தெரியுமோ தெரியாதோ.. சட்டம் தெரியாது.. ஆனால் சமூகம் தெரியும்.. உளவியல் தெரியும்.. ராமன் என்ற ஒரு குற்றவாளி முற்றிலும் விடுவிக்கப்படுகிறான். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
ராமன் பற்றி வைரமுத்து பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்துவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசியுள்ள வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், வைரமுத்துவின் இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தும் என்று தெரியாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத நல்லிணக்கத்தை பற்றி பேசும் திமுக வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காததை விமர்சித்தும் ட்வீட் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
சமீபத்தில் நடந்த திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, இந்துக்கள் போற்றி வணங்கும் பகவான் ஸ்ரீ இராமரை அவதூறாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” நிறுவி வைணவ பக்தியைப் பரப்புவதாகக் கூறுவது மட்டுமன்றி, கம்பராமாயணத்தையும் ஆய்வு செய்து கொண்டிருப்பதாகச் சொல்கிற திமுக எம்.பி. திரு. ஜெகத்ரட்சகன், ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி கொடுத்தோமென பெருமையாகக் கூறும் முதல்வர் ஸ்டாலினும், வைரமுத்துவின் இத்தகைய இந்துவிரோதப் போக்கை ஆமோதிக்கிறார்களா?
மத நல்லிணக்கம் பேசும் திமுக “மத ஒற்றுமை” குறித்து மேடைக்கு மேடை முழங்கும் திமுகவினர் இதுவரை எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்காதது ஏன்? அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை அறிவாலயம் உடன்பிறப்புகள் பலர் இந்து மதத்தவராக இருக்கையில் இதுபோன்ற கருத்துகள் அவர்களது கட்சியினரையும் புண்படுத்தும் என்பது தெரியாதா?
எனவே, கம்ப ராமாயணத்தை முழுமையாகப் படித்துணராமல், தமிழ் அகராதியின் அடிப்படை அர்த்தம் அறியாமல் வைரமுத்து போன்றோர் தங்கள் இஷ்டத்திற்கு திரித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது. தனது இந்த அவதூறான கருத்துகளுக்கு பொதுவெளியில் அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தங்களை மத நல்லிணக்கத்தின் தூணாக முன்னிறுத்திக் கொள்ளும் ஆளும் அரசு அதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
