கள்ளக்குறிச்சி மாணவி பிரேத பரிசோதனை வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய அவரது தந்தை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரணமடைந்ததை அடுத்து, தங்கள் தரப்பு சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவர் குழுவை அமைத்து மறு உடற்கூறு ஆய்வு செய்ய கோரி அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவி தந்தை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இன்று காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார். அப்போது மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அவசரம் கருதி வழக்கை விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். அவரது முறையீட்டை ஏற்று நீதிபதி பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கை விசாரித்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி மறு உடற்கூராய்வு முடிக்கப்பட்ட பிறகும், இன்னும் உடலை பெற்று கொள்ளவில்லை என்றும், அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடைபெற்றுள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் மனுதாரர் வாபஸ் பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமலேயே மறு உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும், தங்கள் தரப்பு மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும், உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்ய மனுதாரர் ராமலிங்கம் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளார்.