ஆந்திர அரசு வாகனத்தை பயன்படுத்தியது குறித்து நித்தி அகர்வால் விளக்கம்!

“அரசு வாகனத்தை அரசு அதிகாரிகள் எனக்கு வழங்கியதாகக் கூறப்படும் செய்தி அடிப்படை ஆதாரமற்றது. அதில் உண்மையில்லை” என்று நித்தி அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நித்தி அகர்வால். பிறகு ‘பூமி’, ‘கலகத் தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள அவர், ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் ஜோடியாக ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்குப் பவன் கல்யாணுடன் அரசு காரில் நித்தி அகர்வால் பயணம் செய்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் பீமாவரம் நகரில் கடை திறப்புவிழா ஒன்றில் நித்தி அகர்வால் கலந்து கொண்டார். இதற்காக அவர் அம்மாநில அரசு வாகனத்தில் வந்திருந்தார். இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து நித்தி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நான் சென்ற வாகனம் விழா ஏற்பாட்டாளர்களால் கொடுக்கப்பட்டது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த வாகனத்தை அரசு அதிகாரிகள் எனக்கு வழங்கியதாகக் கூறப்படும் செய்தி அடிப்படை ஆதாரமற்றது. அதில் உண்மையில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.