சீமானை விமர்சித்து புதிய வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமான் பேசியதை விமர்சித்துள்ளார் விஜயலட்சுமி.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பில் செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டியது செஞ்சி கோட்டை, வரலாற்று திரிபை தடுத்து நிறுத்தி, தமிழ் மன்னர் கோட்டையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்று முன்தினம் நாதக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை பவுன்சர்கள் மறுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, ஆவேசமாக மேடையில் இருந்து இறங்கிய சீமான், வாக்குவாதம் ஏற்பட்ட பகுதிக்கு ஆவேசமாகச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. அவரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சீமான் சலசலப்பிற்கும் சத்தத்திற்கும் அஞ்சுகின்ற திராவிட நரிகள் நாங்கள் கிடையாது என்று பேசி இருந்தார். இந்நிலையில், சீமான் பேச்சு குறித்து விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. புதிய வீடியோவில், “நேற்று மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது சீமான் ஆவேசமாக கீழே இறங்கி ஒருவரை அடிச்சாரு.. பின்னர் மேடையில் ஏறி சலசலப்புக்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் இல்லை நாங்கள் என்று ஒரு வீர வசனத்தை பேசினாரு.. சலசலப்பிற்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் நீங்கள் இல்லை என்றால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் என்னுடைய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்தார்களே.. அப்போது இதேபோன்று தனியாக வந்து வழக்கை விசாரணையை சந்தித்திருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு ஆடியோ மெசேஜ் போட்டு தம்பிகளா நாளைக்கு அண்ணனை விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காங்க எல்லாரும் வந்துருங்க.. அப்படின்னு சொன்னீங்களே.. அது என்ன? அதுக்கும் இந்த வீர வசனத்திற்கும் செட் ஆக மாட்டேங்குதே?

சலசலப்புக்கு அஞ்சாதவர் என்றால் வீரமா போய் சந்திக்க வேண்டியது தானே.. ஏன் சுப்ரீம் கோர்ட்டில் போய் தடை வாங்கினீர்கள்? நீங்கதான் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று பம்மிக்கொண்டு, முதல்வர் எனது அண்ணன் தயாளு அம்மா என்னுடைய அம்மா என்று உறவு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே தவிர, அவர்கள் யாரும் உங்களுக்கு பயந்து அஞ்சி என்னுடைய தம்பி என்று உங்களிடம் உறவு கொண்டாடி கொண்டாடலையே. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.