குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் மேற்குவங்க ஆளுநராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்தவர்.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டன. அதன் முடிவில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கூட்டம் முடிந்ததும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் வெளியிட்டார்.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது.